search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்டிகை கால  பலகாரங்கள் தயாரிப்பவர்கள்  உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் உத்தரவு
    X

    கோப்புபடம்.

    பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் உத்தரவு

    • பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
    • உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை பலகாரங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கி கூறியிருப்பதாவது:-

    பண்டிகை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதும் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமான இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயம்.

    இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக்கூடாது. பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விவரம் சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப்பொருட்களின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உரிமம் அல்லது பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். உணவு தயாரிப்பு விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×