அறுவடைக்கு தயாராகும் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்படநடவடிக்கை எடுக்கப்படுமா?

உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில் 3,200 ஏக்கரில் நெல்நடவு செய்துள்ளனர்.இப்பகுதிகளில் பழைய ஆயக்கட்டுகால்வாய்கள் தூர்வாரும் பணி தாமதமாக துவங்கியதால் சாகுபடி பணிகளும் தாமதமானது.தற்போது இரண்டாம் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமராவதி, பூச்சிமேடு, கல்லாபுரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.தொடர்ந்து பூளவாடி, வேல்நகர், மாவளம்பாறை பகுதிகளில் இம்மாத இறுதியில் அறுவடை பணி துவங்க வாய்ப்புள்ளது.

நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ருத்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் துவக்கி கால நீடிப்பு வழங்கவும், தேவையான அறுவடை எந்திரங்கள் கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசன பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. ஒரு மாதம் வரை அறுவடை நீடிக்கும்.நிலையிலுள்ள நெற் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும். அறுவடைக்கு தேவையான எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை காயவைக்க போதிய உலர்கள வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வசதியில்லாததால் ஒவ்வொரு சீசனிலும் சிரமப்படுகிறோம்.கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் ருத்ராபாளையத்தில் துவக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன் மூடப்பட்டது.

வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அரசு கொள்முதல் மையத்தில் 2,160 ரூபாய் வழங்கப்படுகிறது.தற்போது அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் மீண்டும் செயல்படும் வகையில் கால நீடிப்பு செய்ய வேண்டும் என்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com