என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அருகே வீடு-கடையில் கொள்ளை
- மர்ம நபர்கள் இருவரும் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்துள்ளனர்.
- வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
பல்லடம் :
பல்லடம் பணிக்கம்பட்டியை அடுத்த சின்னிய கவுண்டன்புதூரை சேர்ந்த சாமிநாதன் என்பவரது மனைவி பாப்பம்மாள் (வயது 70). இவர் அவரது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 3 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதனை பார்த்த பாப்பம்மாள் சத்தம் போடவே அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து பல்லடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு முயற்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுபோல் பணிக்கம்பட்டியை அடுத்த ரங்கசமுத்திரத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி காளியம்மாள் (வயது 65). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்தரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






