search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த செலவில் சாயமிடும் தொழில்நுட்பம் - வடமாநிலங்களில் கள ஆய்வு நடத்த குழு
    X

    கோப்புபடம்

    குறைந்த செலவில் சாயமிடும் தொழில்நுட்பம் - வடமாநிலங்களில் கள ஆய்வு நடத்த குழு

    • திருப்பூரின் எதிர்காலம் பருத்தி ஆடைகளில் மட்டும் இல்லை.செயற்கைநூலிழை ஆடை உற்பத்தியும் அவசியம் என்று அனைவரும் உணர்ந்துவிட்டனர்
    • உற்பத்தி செலவு திருப்பூரில் அதிகம் என்பதால் வடமாநிலங்களில் இருப்பது போல் குறைந்த செலவில் சாயமிடும் தொழில்நுட்பத்தை கண்டறிய ஆர்வம் செலுத்தி வருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி என கணக்கிடப்பட்டது. அதன்படி பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியில் பெரும்பாலும் தன்னிறைவு அடைந்துவிட்டோம். அடுத்தகட்டமாக செயற்கை நூலிழை ஆடைகளுக்கு மாறியாக வேண்டிய நெருக்கடி உருவாகிவிட்டது.

    சீனா, வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில், இந்தியாவுக்கு சவாலாக இருக்கின்றன. அந்நாடுகளுடனான போட்டியை சமாளிக்க இந்தியாவும், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரும் செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

    ஆடை உற்பத்தி நிறுவனங்கள் புதிய மாற்றத்துக்கு தயாராகிவிட்டன. அதற்காக நிட்டிங், சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகளும் மாற்றத்துக்கு தயாராக வேண்டும். சில தனியார் சாய ஆலைகளும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் செயல்படுத்த துவங்கிவிட்டன.ஆகமொத்தம் திருப்பூரின் எதிர்காலம் பருத்தி ஆடைகளில் மட்டும் இல்லை.செயற்கைநூலிழை ஆடை உற்பத்தியும் அவசியம் என்று அனைவரும் உணர்ந்துவிட்டனர்.

    குறிப்பாக செயற்கை நூலிழை துணிகளுக்கு சாயமிடும் தொழில்நுட்பத்துக்கு மாற சாய ஆலைகள் தயாராகிவிட்டன. உற்பத்தி செலவு திருப்பூரில் அதிகம் என்பதால் வடமாநிலங்களில் இருப்பது போல் குறைந்த செலவில் சாயமிடும் தொழில்நுட்பத்தை கண்டறிய ஆர்வம் செலுத்தி வருகின்றன.அதற்காக வடமாநில சாய ஆலைகளில் கள ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    திருப்பூரில் செயற்கை நூலிழை துணிகளுக்கு சாயமிடுவது குறித்து விவாதித்தோம். அப்போது, வடமாநிலங்களில் குறைந்த கட்டணத்துக்கு சாயமிடுவதாகவும், திருப்பூர் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டுமெனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் நீங்கலாக எந்த வகையில் உற்பத்தி செலவை குறைக்கலாம் என கண்டறிய வேண்டியது அவசியமாகியுள்ளது. அதற்காக, லூதியானா, சூரத் போன்ற வடமாநில தொழில் நகரங்களுக்கு சென்று நேரடியாக கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் அடங்கிய, தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மே மாதம் வடமாநிலங்களுக்கு சென்று அங்குள்ள சாய ஆலைகளில் பின்பற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து கள ஆய்வு நடத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×