search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைவாழ் மக்கள் நலன் கருதி திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு சாலை வசதி - மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    X

    மலைவாழ் மக்கள் நலன் கருதி திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு சாலை வசதி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    • சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச்செல்கின்றனர்.
    • வன உரிமை குழுவில் திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு ரோடு வசதி செய்து கொடுத்து மலைவாழ் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை தாலுகாவில் உள்ள மலை கிராமங்களில் 3,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக ரோடு வசதி கேட்டு போராடி வருகின்றனர்.முதியவர்கள், கர்ப்பிணிகள், நடமாட முடியாதவர்கள், பாம்பு கடித்தவர், உடல்நிலை பாதித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது சிரமமாக இருக்கிறது.சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச்செல்கின்றனர்.

    சமவெளி பகுதிக்கு வந்து ஆம்புலன்சில் செல்வதற்குள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.மலைகிராமங்களில் இருந்து வேறு வழித்தடத்தில் மருத்துவமனை செல்ல 110 கி.மீ., சுற்றிவர வேண்டியுள்ளது. பல்வேறு கோரிக்கையை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் இதுநாள் வரை பணி துவங்கவில்லை.முதல்கட்டமாக திருமூர்த்திமலை முதல், குருமலை வரை ரோடு அமைத்தால் 6 கி.மீ., தூரத்தில், அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட முடியும்.

    110 கி.மீ., சுற்றிவர வேண்டிய அவசியம் இருக்காது. உயிரிழப்பையும் தடுக்க முடியும்.வன உரிமை சட்டப்படி ரோடு வசதி செய்யலாம். வன உரிமை குழுவில் திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ரோடு வசதியை செய்து கொடுக்க முன்வர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×