என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொன்றை மலர்கள்
உடுமலை பகுதிகளில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
- ஆண்டில் சித்திரை மாதத்தில் மட்டும் பூ பூக்கும் இலையுதிர் வகையைச் சேர்ந்த மரம் இது.
- சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால் பல கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது.
உடுமலை:
உடுமலை பகுதியில் தமிழ் புத்தாண்டு சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குகின்றன.இதுதான் கொன்றை மரம் என தெரியாமலே நகரங்களில் பல இடங்களில் வளர்க்கப்பட்டு வரும் சரக்கொன்றை மரம், கிராமப்பகுதியில் மிக அரிதாகவே காணப்படுகிறது.ஆண்டில் சித்திரை மாதத்தில் மட்டும் பூ பூக்கும் இலையுதிர் வகையைச் சேர்ந்த மரம் இது. சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால் பல கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது.
இதற்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவ குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.வெப்ப மண்டலம் மற்றும் குறை வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக் கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும்.
கோடையின் வறட்சியையும் தாங்கக் கூடியது. சித்திரை மாதத்தில், சரம் சரமாக மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஒரு அடி நீளத்திற்கும் அதிகமாக வளரும் இந்த பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். புத்தாண்டில் சரக்கொன்றை மலரை பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும். ஆண்டு முழுவதும் இனிமையாக அமையும் என்பது நம்பிக்கை.
உடுமலையில் தாராபுரம் ரோடு ராமசாமி நகர் கலைக் கல்லூரி சாலையில் தளி ரோட்டில் கொன்றை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. அதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து மகிழ்கின்றனர். கிராமப் பகுதிகளில் உள்ள சரக்கொன்றை மரத்திலும் பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்துள்ளன.நெடுஞ்சாலையை ஒட்டி வளர்ந்துள்ள, இந்த சரக் கொன்றை பூக்கள் காலையில் உதிர்ந்து மஞ்சளாக காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக உள்ளது.






