ஊக்கத்தொகைக்கான திறனாய்வு தேர்வு பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல் தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம் பெறும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் வீதம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com