search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி,விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததே காரணம். இதனை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில உள்ள கடைகளினாலும், உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றது. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக, சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் வேண்டும்.

    சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பலகுடும்பங்கள் பாதிக்க ப்படுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர துணை காவல் ஆணையர் (வடக்கு) அபிஷேக் குப்தா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாநகர் துணை காவல்ஆணையர் (தெற்கு) வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×