என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள  அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

    • வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
    • இம்முகாமிற்கான 9622 (100 மில்லி) குப்பிகள் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரை உள்ள சுமாா் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ சத்து, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உடல், மன வளா்ச்சி, புத்திகூா்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமானதாகும். வைட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

    இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 9622 (100 மில்லி) குப்பிகள் பெறப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×