search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு

    • சத்துவாச்சாரியை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). இவர் மாதனூர் -ஒடுக்கத்தூர் சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வந்தார். அப்போது மாதனூர் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கிருத்திகா சென்னையில் தங்கி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆடி கிருத்திகைக்காக கிருத்திகா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதனூருக்கு வந்தார். அப்போது கிருத்திகாவிடம் சென்ற செல்வகுமார் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என அழைத்துள்ளார். அதற்கு கிருத்திகா மறுப்பு தெரிவித்ததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று இரவு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு தனது பைக்கில் வந்த செல்வகுமார் தனது பைக் மீது பெட்ரோல் வைத்து தீ வைத்து எரித்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பைக்கை மீட்டு வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கிணற்றில் செல்வகுமார் இன்று காலை பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பிரிந்து சென்றதால் செல்வகுமார் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×