search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என் பெயர் ரஜினி, கமல் என்று கூறிய திருடன்- வந்தவாசி போலீசார் அதிர்ச்சி
    X

    வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை போலீசார் அழைத்து சென்ற காட்சி.

    என் பெயர் ரஜினி, கமல் என்று கூறிய திருடன்- வந்தவாசி போலீசார் அதிர்ச்சி

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
    • பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரேணுகோபால்.

    இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரேணுகோபால் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

    சத்தம் கேட்டு ரேணுகோபால் கண் விழித்து பார்த்தார். வீட்டிற்குள் வாலிபர் சட்டை இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் நீ யார் என்று கேட்டபோது என்னுடைய பெயர் கமல்ஹாசன் என்றும், பின்னர் ரஜினி என்றும் கூறினார். இதனைக்கேட்டு போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் பொதுமக்கள் இன்னொரு முறை பெயரை கேட்டால் சிவாஜி என்று கூறுவான் என கூறியதால் போலீசார் அங்கு நின்றிருந்தவர்களும் சிரிப்பலையில் மூழ்கினர்.

    மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வீட்டின் உள்ளே திருட முயன்ற வாலிபரிடம் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×