என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்டல் உரிமையாளரை வெட்டி கொன்ற கும்பல்
- மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). இவர் தளியில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு உளிவீரனப்பள்ளி அருகே முரளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மீது மீது மோதினர்.
இதில் முரளி நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர்கள் முரளியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட முரளியின் தந்தை ராஜண்ணா என்பவர் போலீசில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் மத்திகிரி அருகேயுள்ள உளிவீரனபள்ளி பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






