என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம கும்பலால் சூறையாடப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தில் பொருட்கள் சிதறி கிடப்பதையும், உடைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளையும் படத்தில் காணலாம்.
மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய கும்பல்
- நள்ளிரவு ஒரு மணியவில் மீண்டும் அலுவலகம் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
- அலுவலகத்தின் வெளியே புதிய மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கொல்லப்பள்ளியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் கொல்லப்பள்ளி, சின்னாறு, முருகனப்பள்ளி, ேமடுப்பள்ளி, திம்மிடி–நாய்க்கனபள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சேவை மற்றும் மின்சார துறை சம்பந்தமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த அலுவலகத்தில்தான் 20-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தேவையான புதிய மின்மாற்றி மாற்றுவதற்கு உண்டான செம்பி கம்பிகள் உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த லைன்மேன் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து நள்ளிரவு ஒரு மணியவில் மீண்டும் அலுவலகம் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அலுவலகத்தின் வெளியே புதிய மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகம் முழுவதும் பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து முருகன் உடனே உதவி செயற்பொறியாளர் பழனி என்பவருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த அவர் உடனே அலுவலகத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, புதிய மின்மாற்றிகளில் இருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் ஆகியவைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் பழனி சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு சூளகிரியை அடுத்த பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திலும் இதேபோன்று மர்ம கும்பல் ஒன்று பொருட்களை சூறையாடி கொள்ளையடித்து சென்றது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் கொல்லப்பள்ளியில் உள்ள அரசு அலுவலகமான மின்வாரிய அலுவலகத்தை மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.






