என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர்
- ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாக தகவல்.
- போலீசார் மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
மதுரை :
மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார். மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதி கடந்த 8-ந் தேதி இரவு இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர். அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர்.






