என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பயங்கரம் காரை விட்டு மோதி கீழே தள்ளி கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை -சொத்து தகராறு காரணமா?-போலீஸ் விசாரணை
- ஆத்திரம் தீராத அந்த நபர்கள் முனியப்பன் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
- விவசாயி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பன்னிகுளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயத55). இவர் விவசாயம் செய்து வருவதோடு பால் மாடுகளும் வளர்த்து வந்தார். அதோடு கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவது உள்ளிட்ட சிறு சிறு மருத்துவ வேலைகளும் பார்ப்பார்.
முனியப்பனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சந்திரா. 2-வது மனைவி பிரியா. இருவருக்குமே ஆண் மற்றும் பெண் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.முனியப்பனிடமிருந்து பிரிந்து அவரது முதல் மனைவி சந்திரா தனது குழந்தைகளுடன் தருமபுரியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் தனது மோட்டார்சைக்கிளில் பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று முனியப்பனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனியப்பனை அந்த காரில் வந்த நபர்கள் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். பின்னர் ஆத்திரம் தீராத அந்த நபர்கள் முனியப்பன் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
அவர்கள் வந்த கார் மழையால் ஏற்பட்ட சகதியில் சிக்கி கொண்டது. எனவே காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்தவெள்ளத்தில் முனியப்பன் பிணமாக கிடப்பதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியப்பன் முதல் மனைவிக்கும், இரண்டாம் மனைவிக்கும் சொத்தை பிரித்து கொடுப்பதில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முனியப்பன் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு எதாவது காரணம் உள்ளதா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.