search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்து கொலை
    X

    ஈரோட்டில் கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்து கொலை

    • ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர்.
    • போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). இவர் பைனான்ஸ் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது சகோதரர் சிவசங்கர் (44). ராதா கிருஷ்ணனிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தவர் திண்டல் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்தார் (44).

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வில்லரசம்பட்டியில் உள்ள தோட்டத்தில் சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவசங்கர், சர்தாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சிவசங்கருடன் இருந்த ஈரோடு காரப்பாறையை சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ் பாண்டி (35) என்பவர் சர்தார் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த சர்தார் மகன் சபீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகராறு முடிந்த பிறகு சந்தோஷ்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் பழையபாளையம் அருகே சென்ற போது சர்தார், அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து, சந்தோஷ் பாண்டியை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சந்தோஷ் பாண்டி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் பாண்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சபீர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சந்தோஷ்பாண்டியின் பிரேத பரிசோதனை இன்று பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×