search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் மகன் இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து பெண் பலி
    X

    காட்பாடி ரெயில் நிலையத்தில் மகன் இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து பெண் பலி

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் பைக் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா தனிமையில் வசித்து வந்தார். கணவரும் இல்லை, மேலும் மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இன்று காலையில் அவர் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார். காலை 7.40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் நியூ டின் சிகியா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.

    அவர் என்ஜின் டிரைவரை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட டிரைவர்கள் ரெயில் பிரேக் போட்டனர். மேலும் அலாரம் எழுப்பினர்.

    ஆனாலும் ரெயில் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாாக இறந்தார்.

    இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (வயது 54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×