என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழைய வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 4 வாலிபர்கள் கைது
- கொலையுண்ட கருப்பு குமார் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாவார்.
- தந்தையின் கொலைக்கு பழிவாங்க மகன் 10 ஆண்டு காத்திருந்து ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பு குமார் (வயது 45). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை அவர் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆரணி கெங்கன் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் குமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பி சென்று விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட கருப்பு குமார் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாவார். கடந்த 2013-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்டா கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் குமார் சம்பந்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக வெங்கட்டாவின் மகன் ஆகாஷ் (வயது23) தனது நண்பர்களுடன் சேர்ந்து குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆகாஷ், அவரது நண்பர்களான கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி குட்டிப்பாவின் மகனான ரவுடி பூபதி(29), புளியந்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த பார்த்திபன் (24), புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவை சேர்ந்த முரளி (26), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக கைதான ஆகாஷ் போலீசாரிடம் கூறும்போது, எனது தந்தை வெங்கட்டாவை கொலை செய்ததால் குமாரை பழிவாங்க கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். தொடர்ந்து கருப்பு குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தேன்.
கடந்த சில நாட்களாக கருப்பு குமாரை கண்காணித்து கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன். அதன் படி நேற்று காலை தனியாக குமார் வந்ததை நோட்டமிட்டு அவரை வெட்டி கொலை செய்தோம் என்று கூறி உள்ளார்.
கைதான ஆகாஷ் உள்பட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையின் கொலைக்கு பழிவாங்க மகன் 10 ஆண்டு காத்திருந்து ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.