search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்துக் கொன்ற யானை
    X

    தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்துக் கொன்ற யானை

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
    • அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (36). விவசாயி. அதே பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் ராகி பயிரிட்டு இருந்தார். அது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்த பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமுவும் தினமும் இரவில் தனது விவசாய தோட்டத்தில் காவலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அவர் வளர்க்கும் நாயும் இரவு நேரத்தில் அவருடன் காவலில் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ராமு தனது விவசாய தோட்டத்தில் காவலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை நேரம் ராமு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ராமு ராகி தோட்டத்துக்குள் புகுந்தது. யானை தோட்டத்துக்குள் புகுந்ததை பார்த்த அவரது நாய் குரைத்தது.

    இதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானை ராமுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ராமுவின் நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் காவலில் இருந்த விவசாயிகள் அவர் தோட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது ராமு யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் ராமுவின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராமு வளர்த்த நாயும் அவர் உடல் அருகே சோகத்துடன் நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×