என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகள் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்தில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது- பிரகாஷ் காரத் பேட்டி
- பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
- செயற்கையாக அதானி குழும பங்குகளை உயர்த்தியும், பங்குச்சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நடவடிக்கைகள், வரவு செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அதானி குழுமம் தொடர்பான பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது.
செயற்கையாக அதானி குழும பங்குகளை உயர்த்தியும், பங்குச்சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளது. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்கும் நடவடிக்கைகளிலும் செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகமாக்கி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவில்லை எனவும், நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
சிறு முதலீட்டாளர்கள் பாதிப்புகளை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், ஆனால் அதானி குழும மோசடிகள் குறித்து விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றார். செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை விசாரிக்காத நிலையில் மத்திய அரசும் கோரிக்கைகளை நிராகரித்து வருவதாகவும், உச்சநீதிமன்றமும் முறையாக விசாரிக்க உத்தரவிட மறுப்பதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பாக இரண்டு பங்கு சந்தை மோசடிகளில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதானி விவகாரத்திலும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணை நடத்திட வேண்டும் என்றார். திரிபுராவில் தைரியமாக 94% வாக்காளர்கள் வந்து வாக்களித்துள்ள நிலையில் ஆளுங்கட்சிக்கெதிரான வாக்குகள் பதிவாகி இருக்கும் என ஆளும் பாஜக பதட்டத்தில் உள்ளதாகவும், மக்களை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பல்வேறு தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் முடிவுகள் வரும் வரையில் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், தவறு செய்தவர்களை கைது செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரகாஷ் காரத் கேட்டு கொண்டார்.
அதானி என்ற பெயரை கூட நாடாளுமன்றத்தில் உச்சரிக்க பிரதமர் மறுக்கிறார் என சாடினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கவனிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்தி மொழி திணிப்பு குறித்த கேள்விக்கு நாடு முழுவதுமுள்ள 22மொழிகளை தேசிய அளவிலான மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்றார். அனைத்து மொழிகளையும் அரசு ஊக்கப்படுத்தி, விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.






