என் மலர்
உள்ளூர் செய்திகள்

செம்மரம் மறைத்து வைக்க உதவி செய்ய மறுத்த நண்பனை காரில் கடத்தி கொன்ற வன ஊழியர் 3 பேர் கைது
- ராஜாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து காரில் ராமதாசை கடத்திச் சென்றனர்.
- போலீசார் ராஜாராம் அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த கீழ் கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமதாஸ் (வயது 28) விவசாயி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டு ஆகிறது.மனைவி சசிகலா மற்றும் 5 வயது குழந்தை உள்ளது.
ராமதாஸ் அணைக்கட்டு அருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.கடந்த 5 நாட்களுக்கு முன்பு நிலைத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமதாஸ் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஜமுனாமரத்தூர் அருகே உள்ள வேட கொல்லை மேடு அமிர்தி சாலை ஓரம் ராமதாஸ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஜமுனாமரத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் கொலையான ராமதாஸின் நண்பர்கள் யார் செல்போனில் ராமதாஸ் யாருடன் அதிகமாக பேசி உள்ளார் என ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது பள்ளி தோழரான நெருங்கிய நண்பர் ஜவ்வாது மலையில் வனவராக பணிபுரியும் ராஜாராம் (26) என்பவர் அதிகமாக போனில் பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜாராமை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து ராமதாசை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
ராஜாராம் வனப்பகுதியில் வெட்டி கடத்தும் செம்மரக்கட்டையை மறைத்து வைப்பதற்கு இடம் கேட்டுள்ளார். ஆனால் ராமதாஸ் இடம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் செய்யாரை சேர்ந்த அவரது நண்பர்களான குகன் (20) கிருபாகரன் (26) ஆகியோரை வரவழைத்தார்.
சம்பவத்தன்று ராமதாஸ் அணைக்கட்டு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விட்டு பஸ்சில் கீழ் கணவாயூர் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அப்போது ராஜாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து காரில் ராமதாசை கடத்திச் சென்றனர்.
பூசிமலை குப்பம் வந்த போது ராமதாசை தாக்கினர்.மேலும் கயிற்றால் கழுத்தை இறுக்கினர். இதில் ராமதாஸ் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் உடலை அமிர்தி சாலையில் வீசி சென்றது தெரியவந்தது.
போலீசார் ராஜாராம் அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






