என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு- லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
- திருத்தணி அருகே உள்ள எல்லம் பள்ளியில் கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.
- கல்குவாரி இயங்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள எல்லம் பள்ளியில் கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிக சத்தத்துடன் கற்களை உடைக்க வெடி வைப்பதாகவும், அரசு அனுமதித்ததை விட கூடுதலாக கற்கள் தோண்டி எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் கல்குவாரிக்கு செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வெடி வைத்து தகர்க்கும் கற்கள் அருகில் உள்ள விளை நிலங்களில் விழுவதாகவும், விவசாய கிணற்றில் மண் சரிவு ஏற்படுவதாகவும் தெரிவித்து வந்தனர்.
இதனால் அப்பகுதியில் கல்குவாரி இயங்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்குவாரிக்கு சென்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் லாரிகளை சிறைபிடித்து அங்கிருந்தவர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






