என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபரை அரிவாளால் வெட்டிய மாமனார்-மாமியார் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக்-ஜோதி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை பெற்றோர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தாளவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி திகனாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் விக்னேஷ் கார்த்திக் (29). இதே பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மனைவி துளசியம்மா. இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார்.
விக்னேஷ் கார்த்திக்கும், ஜோதியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக்-ஜோதி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து விக்னேஷ் கார்த்திக் ஜோதியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
திருமணம் முடிந்த பின்பு விக்னேஷ் கார்த்திக் கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திகனாரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் ஜோதியின் தந்தை பால்ராஜ் தாயார் துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் விக்னேஷ கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி அவர்கள் 3 பேரும் விக்னேஷ் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் மனைவி மற்றும் பெற்றோருடன் விக்னேஷ் கார்த்திக் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் திடீரென புகுந்த துளசியம்மா தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை விக்னேஷ் கார்த்திக் முகத்தில் வீசினார். அந்த நேரத்தில் பால்ராஜ் அரிவாளால் விக்னேஷ் கார்த்திக்கை வெட்டினார். இதில் விக்னேஷ் கார்த்திக்குக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
மனைவி, பெற்றோர் முன்னிலையில் விக்னேஷ் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் பால்ராஜ், துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விக்னேஷ் கார்த்திக்கை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தெரிய வந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தங்களது எதிர்ப்பையும் மீறி மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோர் விக்னேஷ் கார்த்திக்கை கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பால்ராஜ் உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளனர்.
மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை பெற்றோர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தாளவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






