ஆலங்குளத்தில் மணல் கடத்தல் கும்பலிடம் செல்போன் பரிசு வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ஆலங்குளம் பகுதியில் மணல் லாரி வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை தினேஷ் பாபு அன்பளிப்பாக வாங்கி உள்ளார்.ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசுக்கு தகவல் வரவே, அவர் தினேஷ் பாபுவை அழைத்து அந்த செல்போனை வாங்கி லாரி உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துள்ளார்.
ஆலங்குளத்தில் மணல் கடத்தல் கும்பலிடம் செல்போன் பரிசு வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
Published on

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ் பாபு.

இவர் அப்பகுதியில் உள்ள மணல் கடத்தல் கும்பலிடம் சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் ஆலங்குளம் பகுதியில் மணல் லாரி வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை அன்பளிப்பாக வாங்கி உள்ளார்.

இதுகுறித்து ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசுக்கு தகவல் வரவே, அவர் தினேஷ் பாபுவை அழைத்து அந்த செல்போனை வாங்கி லாரி உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் பாபு லாரி உரிமையாளர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கருதி கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் லாரி உரிமையாளர் ஆலங்குளம் காவல் நிலைய எல்லையை விட்டு கடையம் காவல் நிலைய எல்லைக்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தினேஷ் பாபு அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்து ஆலங்குளம் போலீஸ் நிலையம் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து அந்த லாரி உரிமையாளர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு புகார் அனுப்பினார்.

அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்திபெக்டர் தினேஷ் பாபுவை பணி மாறுதல் செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். அதன் பேரில் தினேஷ் பாபு உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com