search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு
    X

    சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு

    • சபாநாயகர் அப்பாவு உடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
    • சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது பதவியை பறிக்குமாறும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றுமாறும் அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கும் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும் என்று தீர்ப்பு கூறி ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின், சட்டசபை அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பறிக்கவும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றவும் அ.தி.மு.க. சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக சபாநாயகர் அப்பாவுவை, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வத்தை, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும். சட்டசபையில் அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    Next Story
    ×