என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவடியில் சாலையில் சுற்றித்திரிந்த 184 மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
- 166 மாட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- ரூ.61 ஆயிரத்து 500 -க்கு மாடுகளை ஏலம் விடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆவடி :
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலை, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாலும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாலும், கால்நடைகளின் உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில் மாடுகளின் உரிமையாளர்களை நேரில் அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி மாட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனை மீறி சாலைகளை சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களின் விவரங்கள் சேகரித்து 166 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மாங்காடு நகராட்சி, திருவேற்காடு நகராட்சி ஆணையர்களுக்கும், மற்றும் அய்யப்பன்தாங்கல், வானகரம் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மற்றும் பகுதி - 7 மண்டல அதிகாரிக்கும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதின் பேரில் அவர்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சாலைகளில் சுற்றித்திரிந்த 184 மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.61 ஆயிரத்து 500 -க்கு மாடுகளை ஏலம் விடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






