search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    மதுரையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்

    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 32). இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கூலித்தொழிலாளியான அழகுபாண்டி மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அங்குள்ள முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

    அவர் ஆந்திரா சென்றதும் அவரது மனைவி தனது மகன்களுடன் மதுரை ஒத்தக்கடை அருகே மேல உறங்கான்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அழகுபாண்டி மீதான கொலைமுயற்சி வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அதில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ஆந்திராவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி மேல உறங்கான்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று இரவு அழகு பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினர். அழகு பாண்டியும், அவரது மாமனார் மூக்கனும் முன்பக்க அறையில் படுத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்களது வீட்டின் கதவை சிலர் தட்டினர்.

    இதனால் விழித்தெழுந்த மூக்கன் வீட்டின் கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே 5 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அந்த நபர்கள், மூக்கனை கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கு தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த அழகுபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அழகுபாண்டியை கொன்ற மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறைக்குள் படுத்து தூங்கிய அழகுபாண்டியின் மனைவி மற்றும் மகன்கள் எழுந்து வந்தனர். அவர்கள் அழகுபாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி வந்து பார்வையிட்டார். அவர் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு பாண்டிக்கு ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஏராளமான அடிதடி வழக்குகளில் தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு விரோதிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆகவே முன் விரோதத்தில் அவரை மர்மநபர்கள் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×