என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடசேரியில் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று நகை பறித்த கொள்ளையன் கைது
- மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் கீழே இறங்கிய அந்த வாலிபர் திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- கைது செய்யப்பட்ட வினித் பிரபல கொள்ளையன் ஆவார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59), டிரைவர்.
இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வந்த போது, டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் குமரேசனிடம் லிப்ட் கேட்டு உள்ளார். வடசேரி பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு குமரேசன் புறப்பட்டார்.
வரும் வழியில் அந்த வாலிபர், குமரேசனிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினார். அதன்படி மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் கீழே இறங்கிய அந்த வாலிபர் திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வடசேரி போலீசில் குமரேசன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் நகை பறித்துச் சென்றவன் உருவம் பதிவாகி இருந்தது.அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒழுகின சேரி ஓட்டுபுரதெருவை சேர்ந்த வினித் (வயது 26) என்பவர் தான் குமரேசனிடம் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்ய போலீசார் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் போலீசார் தேடுவது அறிந்த வினித் தலைமறைவாகிவிட்டார்.இந்த நிலையில் நேற்று இரவு வினித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து வினித்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட வினித் பிரபல கொள்ளையன் ஆவார். இவன் மீது ஏற்கனவே கோவை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.