search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் தொடர் மழை: ஏற்காட்டில் 5 மணி நேரம் மழை கொட்டியது
    X

    கோப்பு படம்

    சேலம் மாவட்டத்தில் தொடர் மழை: ஏற்காட்டில் 5 மணி நேரம் மழை கொட்டியது

    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது.

    இதே போல மேட்டூர், ஆத்தூர், காடையாம்பட்டி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. விவசாய பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், 5 ரோடு, 4 ரோடு பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 25.8, ஆத்தூர் 17.20, காடையாம்பட்டி 17, சேலம் 15.2, பெத்தநாயக்கன் பாளையம் 14 , தலைவாசல் 13, ஆனைமடுவு 5, ஓமலூர் 2.4, தம்மம்பட்டி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 144.60 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×