search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- மூதாட்டியை கொன்று வீட்டில் புதைத்து நகையை பறித்த வாலிபர்
    X

    கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- மூதாட்டியை கொன்று வீட்டில் புதைத்து நகையை பறித்த வாலிபர்

    • சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடினார்.
    • பன்னீர் செல்வம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி இந்திராணி (வயது 72). தாண்டவராயன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவரது மகன், மகள்கள் 5 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்திராணி சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி 100 நாள் வேலைக்கு சென்ற இந்திராணி, இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சென்னையில் வசிக்கும் இந்திராணியின் மகன் பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடினார். இதையடுத்து பன்னீர் செல்வம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவசங்கர் (26) என்பவருக்கு கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் கடனாக இந்திராணி வழங்கியுள்ளார். இந்திராணி பலமுறை கேட்டும் சிவசங்கர் திருப்பி அளிக்கவில்லை.

    இந்நிலையில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த இந்திராணியிடம் வந்த சிவசங்கர் கடனாக கொடுத்த ரூ.30 ஆயிரத்தை எனது வீட்டிற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சிவசங்கர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. வீட்டிற்கு சோதனை நடத்திய போலீசாருக்கு துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு அருகில் சிவசங்கரின் தாயார் கட்டி வரும் வீட்டிற்கு சென்று பார்க்கின்றனர். தரை போடாத நிலையில் ஒரு இடம் மேடாக இருந்தது. அங்கு சென்று பார்த்த போது பள்ளம் தோண்டி புதைத்ததற்கான அறிகுறி போலீசாருக்கு தெரிந்தது. கடனை திருப்பி தருவார் என்று நம்பி வந்த இந்திராணியை கொலை செய்து தனது தாயார் புதியதாக கட்டிவரும் வீட்டிற்குள்ளேயே சிவசங்கர் புதைத்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தி போலீசாருக்கு தெரியவந்தது.

    சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கர தாஸ்-க்கு போலீசார் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் முன்னிலையில் இந்திராணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது தலையில் பலத்த காயங்களுடன் காது அறுக்கப்பட்ட நிலையில் இந்திராணியில் உடல் இருந்தது. அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியும் காணவில்லை என்று அவரது மகன் போலீசாரிடம் கூறினார். இச்சம்பவம் அறிந்த கிராம மக்கள் சிவசங்கர் வீட்டின் முன்பு குவிந்தனர். இந்திராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதால், அவரது தாயார் கொளஞ்சி மனைவி குப்புவிடம் (45) விசாரணை நடத்தினர். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாகியுள்ள சிவசங்கரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×