search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்தனர்- தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்தனர்- தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு

    • திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50).

    இவர்களது மகள் சந்தியா (27). ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தற்போது அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

    இந்நிலையில் இவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சந்தியாவிற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முதலூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

    அரிகரசுதன் சென்னை போரூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டம் அடைந்ததால் அரிகரசுதனும், சந்தியாவும் ஊருக்கு வந்து விட்டனர். பின்னர் அரிகரசுதன் உடன்குடி அனல்மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும் அரிகரசுதன், சந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தந்தை, தாய் மற்றும் சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அரிகரசுதன், சத்தியசீலன், ராஜலெட்சுமி, ஜீவஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×