search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு புறப்பட்ட மணப்பெண்ணை பிரிய மறுத்து கண்ணீர் விட்ட வளர்ப்பு நாய்

    • வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும்.
    • சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது.

    நாகர்கோவில்:

    திருமணம் ஆயிரம் காலத்து பயிர்.

    திருமண பந்தத்தில் இணையும் பெண், திருமணம் முடிந்ததும் கணவர் வீட்டிற்கு வாழ செல்வது வழக்கம். அப்படி புறப்படும் பெண்ணை, உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி வழி அனுப்பி வைப்பார்கள்.

    பிறந்தது முதல் பெற்றோர் வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண், திடீரென கணவர் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் போது அவரை வளர்த்த பெற்றோர் கண்களில் இருந்து அவர்களை அறியாமல் கண்ணீர் வடியும். இதனை ஆனந்த கண்ணீர் என்றும் கூறலாம். பெற்ற மகளின் பிரிவை தாங்க முடியாமல் ஏற்படும் துயரம் எனவும் கூறலாம்.

    ஒவ்வொரு திருமண வீடுகளிலும் இந்த நிகழ்வை பார்க்கலாம். அப்போது மணப்பெண்ணின் தாய் ஒருபக்கம் அழ, மறுபக்கம் தந்தை யாருக்கும் தெரியாமல் கண்ணை கசக்கி கொண்டிருக்க, உடன்பிறந்தவர்கள், சகோதரியை கட்டிப்பிடித்து அழ இந்த காட்சிகள் கூடி நிற்போரை கலங்க வைக்கும்.

    இதனை கண்டு மணப்பெண்ணும் கண்கள் பனிக்க கணவனோடு புறப்பட்டு செல்வார். நாகர்கோவிலை அடுத்த சித்திரை மகராஜபுரம் பகுதியை சேர்ந்த சுயம்பு செல்வன் என்பவரது வீட்டு திருமணத்தில் மணப்பெண் கணவர் வீட்டுக்கு புறப்பட்ட போது அவர் வளர்த்த நாய் மணப்பெண் முன்பு நடத்திய பாச போராட்டம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.

    வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும். சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் முடிந்தது. மாலையில் அவர் கணவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மணப்பெண் வளர்த்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அந்த நாயை அவிழ்த்து விட்டனர்.

    பிரிய மறுத்து கண்ணீர் விட்ட வளர்ப்பு நாயை கட்டிப்பிடித்த மணப்பெண்.

    உடனே அந்த நாய் ஓடி சென்று மணப்பெண்ணின் மீது தாவி, தாவி பாய்ந்தது. அவரும் நாயை செல்லமாக தடவி கொடுத்தப்படி இருந்தார். பின்னர் அவர் கணவருடன் புறப்பட தயாரானதும், அந்த நாய், மணப்பெண்ணின் முந்தானையை பிடித்தபடி அவரை விடமறுத்து அழுதது. மணப்பெண்ணின் குறுக்கும், நெடுக்குமாக நடந்து பிரிவை தாங்க முடியாத நிலையை உணர்த்தி காட்டியது. இது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ வைத்தது.

    இந்த காட்சிகள் அனைத்தையும் திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×