search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற கணவன் கைது
    X

    பென்னாகரம் அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற கணவன் கைது

    • பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியா(42) என்ற மனைவியும், மணிகண்டன் (25), சேட்டு (22) என்ற 2 மகன்களும் உள்ளனர்,

    இவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். அவர்களது 2 மகன்களும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜின் மனைவி பிரியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கூலி வேலை செய்து வந்தார். பிரியா வேலைக்கு செல்வதால் தங்கராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து பிரியாவை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரியா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதனை பார்த்த தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் பிரியா வேலைக்கு செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்த தங்கராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவும் அவர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தப்பி ஓடிய தங்கராஜை பென்னாகரம் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×