என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த மாமனார்
- முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி முத்துமாரி (வயது 28) என்ற மனைவியும், இரட்டை குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழரசன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் தங்கராஜிக்கு வீட்டை எழுதிக் கொடுப்பதற்கு மறுத்த தமிழரசன், முத்துமாரி ஆகியோர் 2-வது திருமணம் செய்வதையும் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் இன்று காலை மகன் தமிழரசன் அங்குள்ள கடைக்கு செல்வதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரும்பு கம்பியால் முத்துமாரி தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.






