search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வாகனங்களில் 5 ஆண்டு அனுபவம் இல்லாத டிரைவர்களை நியமித்தால் நடவடிக்கை- அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    பள்ளி வாகனங்களில் 5 ஆண்டு அனுபவம் இல்லாத டிரைவர்களை நியமித்தால் நடவடிக்கை- அதிகாரிகள் எச்சரிக்கை

    • வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    பொன்னேரி:

    கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

    பள்ளி வாகனங்கள் சரியான பராமரிப்பில் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள 34 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான சுமார் 400 வாகனங்கள் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    பள்ளி வாகனங்களில் விதிமுறைகளின்படி கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் கருவி, மற்றும் அவசர கதவு, தீயணைப்பான், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டது.

    அப்போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    நேற்று ஆய்வு செய்த 126 வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படாத 35 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறியதாவது:-

    விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் இல்லாத டிரைவர்களை பணியமர்த்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளி நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை முறையாக பாரமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. முதற்கட்டமாக தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 78 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டன.

    திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ. சத்யா, மாட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×