என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்.ஜி.ஓ. காலனியில் நகை-பணம் கேட்டு ஆசிரியையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த கணவர் 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு
- சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார்.
- போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
என்.ஜி.ஓ.காலனி:
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (வயது 33). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
அஜித்ராம் பிரதீப்புக்கும் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அஜித் ராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று சுவிதா கண்ணனிடம் மீண்டும் பணம் கேட்டு அஜித்ராம் பிரதீப் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சுவிதா கண்ணன் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுவிதா கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார். அதில் உனது தந்தை வீட்டு பத்திரத்தை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர்மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






