search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.
    • சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை இரவு முதல் தொடங்கியது.

    கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தேகோஸ்தே, இ.சி.ஐ., மெத்தடிஸ்ட், ஆற்காடு லூத்ரன் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து ஆலய மணியை ஒலித்தனர். மின் விளக்குகளை அணைத்து புத்தாண்டை வரவேற்றனர்.

    ஆராதனை முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கத்தோலிக்க திருச்சபைகளில் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.

    இங்கு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பிறகு காலை 6 மணி முதல் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பரங்கிமலை ஆலயம், சின்னமலை அந்தோணியார் ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    சென்னை கதீட்ரல் பேராலயத்தில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் சிறப்பு செய்தி வழங்கினார். இங்கு அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது.

    மேலும் சூளையில் உள்ள தூய பவுல் ஆலயம், அந்த்ரேயா ஆலயம், ஆருத்ரா ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம் ஆகிய இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டு பிறந்ததும் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×