search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்
    X

    திருவள்ளூரில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்

    • வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முகமது அலி 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவரது மனைவி பாரதி (32). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    பாரதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இடுப்பு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவர் மணிகண்டன் அழைத்து சென்றார். மருத்துவமனையில் 2-வது மாடியில் கர்ப்பிணிகள் வார்டு நர்சுகளிடம் விட்டு விட்டு மனைவியின் உடைகளை எடுக்க மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது பாரதி நர்சுகள் அமரும் இருக்கையில் அமர்ந்து உள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள நர்சுகள் பாரதியிடம் விவரத்தை கேட்டுள்ளனர். பின்னர் அவரை இருக்கையில் அமரக்கூடாது. ஓரமாக உட்காருமாறு அலட்சியமாக கூறினார்கள். மேலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்காததால் அவருக்கு இடுப்பு வலியும் காய்ச்சலும் அதிகரித்தது. ஆனாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிகிச்சை அளிக்காதது குறித்து கணவர் மணிகண்டன் நர்சுகளிடம் கேட்டார். வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நர்சுகள் பாரதியை அவசர அவசரமாக அழைத்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என கையில் முறையாக ஊசியை ஏற்றாமல் ஏனோதானோவென ஊசியை குத்தியதால் வலி தாங்க முடியாமல் கதறி உள்ளார்.

    பின்னரும் சிகிச்சை அளிக்காமல் தரையிலேயே அமர வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நர்சுகளிடம் வாக்குவாதம் செய்துவிட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனைவியை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×