search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது நிலையம் 10 நாளில் திறப்பு - அமைச்சர் கே.என்.நேரு
    X

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது நிலையம் 10 நாளில் திறப்பு - அமைச்சர் கே.என்.நேரு

    • முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.
    • சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2013-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் இதை திறக்க முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.


    நெம்மேலியில் 2-வது நிலையத்தில் இருந்து தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

    சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது. நெம்மேலியில் 2 நிலையங்கள் உள்ள நிலையில் போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2026 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×