search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தீவிரம்
    X

    சென்னை ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தீவிரம்

    • சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
    • முதல் கட்டமாக மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் ராட்சத எந்திரங்கள் மூலம் இரவு, பகல் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை-மணிக்கூண்டு இடையே சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அப்பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

    இப்பாதையில், முதல் கட்டமாக மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    சுரங்க ரெயில் நிலையங்கள் கட்டுவதற்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்தப்பட்டு, சுரங்க ரெயில் நிலையம் கட்டும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான ஆரம்ப கட்ட பணிக்காக ராட்சத எந்திரங்கள், ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்காக, ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மணிக்கூண்டு நோக்கி செல்லும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

    ராயப்பேட்டை வெஸ்லி சர்ச் அருகே மணிக்கூண்டில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி செல்லும் சாலையில் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளன.

    இச்சாலையில் வாகனங்கள் இருவழியிலும் மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணியையொட்டி அப்பகுதியில் பல ராட்சத கிரேன்கள் மற்றும் எந்திரங்கள் மூலம் இரவு, பகலாக தீவிரமாக பணிகள் நடந்து வருவதை சாலையில் செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    Next Story
    ×