search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் டிரைவர் அடித்துக்கொலை- 5 பேர் கைது
    X

    மதுரையில் டிரைவர் அடித்துக்கொலை- 5 பேர் கைது

    • ராஜபாண்டி அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • ராஜபாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை கரிமேடு பொன்னகரம் தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி என்பவரின் மகன் ராஜபாண்டி (வயது24). இவர் அதே பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    ராஜபாண்டி அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது சில வழக்குகளும் உள்ளன. நேற்றிரவு அவர் தனது நண்பர்களான வெங்கடேஷ் என்கிற மொச்சை, பிரசன்னா ஆகிய இருவருடன் தங்களது பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது பிரசன்னா மேலபென்னகரம் 4-வது தெருவை சேர்ந்த மனோஜ் சிவா (22) என்பவருக்கு போனில் பேசியுள்ளார். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அது தொடர்பாக பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    அப்போது மனோஜ்சிவா தகாத வார்த்தைகளால் பிரசன்னாவை திட்டியதாக தெரிகிறது. தன்னை திட்டியது குறித்து ராஜபாண்டியிடம் பிரசன்னா தெரிவித்தார். இதையடுத்து அவர், போனிலேயே மனோஜ் சிவாவுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தங்களை எதிர்த்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    பின்பு சிறிது நேரத்தில் ராஜபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி சென்றார். அவரது நண்பர்கள் பிரசன்னா, வெங்கடேஷ் ஆகிய இருவரும் மதுகுடித்த இடத்திலேயே இருந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் அங்கு மனோஜ் சிவா உள்பட 6 பேர் அங்கு வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ராஜபாண்டி நண்பர்கள் இருந்த இடத்திற்கு திரும்பி வந்தார். அப்போது மனோஜ் சிவா உள்ளிட்டோர் ராஜபாண்டியை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். அதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    அவர் சுதாரித்து எழுவதற்கு முன் மனோஜ் சிவா உள்ளிட்ட 6 பேரும் உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். அவர்களை பிரசன்னா மற்றும் வெங்கடேஷ் தடுத்தனர். இருந்த போதிலும் ஆத்திரம் தீராத மனோஜ் சிவா உள்ளிட்டோர் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ராஜபாண்டியின் தலையில் போட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து கொலையாளிகள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ராஜபாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இத்ரிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ராஜபாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜபாண்டி கொலை குறித்து சம்பவ இடத்தில் இருந்த அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மனோஜ்சிவா, செல்லூர் களத்து பொட்டல் பர்மா காலனி கிருஷ்ணகுமார் என்ற கிட்டு (26), பொன்னகரம் பிராட்வே தெரு ஸ்ரீ மணிகண்டன் (20), பொன்னகரம் லோகேஷ் (20), பெத்தானியாபுரம் தங்கபாண்டி (19), சிம்மக்கல் கண்ணன் (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து ராஜபாண்டியை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனோஜ் சிவா, ஸ்ரீமணிகண்டன், லோகேஷ், தங்கபாண்டி, கண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜபாண்டிக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவர் தற்போது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×