search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 2-வது நாளாக கோடை மழை
    X

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 2-வது நாளாக கோடை மழை

    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்றும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக பெய்த மழை பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலமாக பெய்தது. மேலும் வேகமாக காற்றும் வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குண்டாறு, புளியரை, தெற்குமேடு, கற்குடி, தவணை, பண்பொழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை இடி-மின்னலுடன் திடீரென வானில் மேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. செங்கோட்டையில் 20 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லிமீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 0.6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் பகல்நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒரு சில அணைகள் வறண்டு விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 27.60 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    அந்த அணையில் சுமார் 15 அடி வரை சகதி இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் அதிகபட்சமாக 10 அடி வரை மட்டுமே நீர் இருப்பதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்பே மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×