என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலையில் நிதி நிறுவன அதிபரை கடத்தி கொலை செய்த கும்பல்
    X

    கொல்லிமலையில் நிதி நிறுவன அதிபரை கடத்தி கொலை செய்த கும்பல்

    • சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கொமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவரது மனைவி சத்யா (37). இவர்களுக்கு கவுதம் (18), நந்தகுமார் (16) என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனும், இவரது தோழி மகாலட்சுமி என்ற பெண்ணும் பங்குதாரராக சேர்ந்து நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தனர்.

    இந்த நிறுவனத்தில் பொதுமக்களுக்கு கடனாக வட்டிக்கு பணம் கொடுப்பது, பின்னர் பணத்தை வட்டியுடன் வசூல் செய்வது, கமிஷன் அடிப்படையில் இருவரும் இந்த பணத்தை பங்கு போட்டு, மேலும் கடன் கொடுப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வந்தனர். சரவணன், இதைத்தவிர அரிசி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சரவணனை மர்ம கும்பல் கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதிக்கு கடத்திச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து அந்த அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுதாகவும் மிரட்டி உள்ளனர்.

    இதனால் பயந்து போன சரவணன், செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு என்னை கடத்தி வந்து அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறாங்க, எப்படியாவது பணத்தை ஏற்பாடு பண்ணுங்க, இல்லை என்றால் என்னை உயிருடன் விடமாட்டாங்க என வீட்டில் உள்ள தனது மனைவி சத்யாவிடம் பேசியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்து வந்தார். மேலும் சரவணன் தனது பங்குதாரர் மகாலட்சுமியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பணம் கொண்டு தருகிறோம் என கடத்தல் கும்பலிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே கடத்தல் கும்பல் 3 நாட்களாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி நேற்று சரவணனை கொலை செய்து உடலை அறையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை விடுதி மேலாளர் இது குறித்து வாழவந்திநாடு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தார். சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி கிராம நிர்வாக அலுவலர், வாழவந்திநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரவணனிடம், அவருக்கு தெரிந்த நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அணுகி பெரிய அளவில் பணம் தருகிறேன். இந்த பணத்தை நிதி நிறுவனம் மூலம் வட்டிக்கு விட்டு அதில் கிடைக்கும் வட்டி பணத்தை கமிஷன் அடிப்படையில் இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

    அதன்படி முதற்கட்டமாக அந்த நபர் 20 லட்சம் ரூபாயை சரவணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி சரவணன் இந்த பணத்திற்கான வட்டி அந்த நபரிடம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

    அதற்கு சரவணன், தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் கட்டவில்லை என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால், இருவருக்கும் கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் அந்த நபர் ஆள் வைத்து சரவணனை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் சத்யா, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு தனது கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.

    தொடர்ந்து ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உறவினர்கள் திரண்டுள்ளதால், பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்புக்காக ஆஸ்பத்திரி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×