search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேது சமுத்திரத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்- வீரமணி வலியுறுத்தல்
    X

    சேது சமுத்திரத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்- வீரமணி வலியுறுத்தல்

    • சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும்.
    • இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது.

    திருச்சி:

    தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் சார்பாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை காட்டூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க. முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி கூறியதாவது:- தற்போதைய தி.மு.க. அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார். அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கின.

    அப்பொழுது சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக்கூறி அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.

    இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும். இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

    எனவே தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் சார்பில் வைக்கிறோம்.

    சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும். இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது. பெரியாரின் நினைவு நாளில் சேது சமுத்திர திட்டத்தை தொடங்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×