search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி நிறுவன இயக்குனரை கடத்தி பணம் பறித்ததாக புகார்: ஐ.பி.எஸ். அதிகாரியின் மனு தள்ளுபடி
    X

    நிதி நிறுவன இயக்குனரை கடத்தி பணம் பறித்ததாக புகார்: ஐ.பி.எஸ். அதிகாரியின் மனு தள்ளுபடி

    • ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
    • மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    கோவை:

    திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இங்கு முதலீடு செய்தனர்.

    ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து 571 பேரிடம் ரூ.930 கோடி மோசடி செய்தது. இதுதொடர்பாக இந்த நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டு அவர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார், கமலவள்ளியை கடத்திச்சென்று ரூ.3 கோடியை பறித்ததாக அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோ கன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தற்போது கரூர் காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான பிரமோத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அதுபோன்று மற்ற 4 பேரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமார், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 28-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் பிரமோத்குமார் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×