என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனைத்து யானைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்- சுற்றுச்சூழல், வனத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
- இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்கு சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை. இந்த யானையின் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் வழக்கை தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி யானையை பாகனிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோவில் விழா ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட போது யானைக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவில் தெரிவித்ததாவது:-
லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை பாகனிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.
யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான சிகிச்சையும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும்.
லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் சரியான உணவு, பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். லலிதா யானையை எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபடுத்த கூடாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் எந்த யானையையும் இனிமேல் வளர்ப்பு யானையாக மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது பல இடங்களில் யானைகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானையை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் யானை ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆகவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். ஆகவே அது தொடர்பாக ஆலோசித்து அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். எல்சா பவுண்டேஷனின் தரப்பில் திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடமில்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.






