என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு வீரர் கொலையில் பரபரப்பு- கள்ளக்காதல் பிரச்சினையில் கொன்று கிணற்றில் வீசியது அம்பலம்
- கைகால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
- கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு ஒரு வாலிபர் உடல் மிதப்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினருடன் சென்று அவரது உடலை மீட்டனர்.
கைகால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் மணி(23) என்பது உறுதியானது. இவரது தந்தை இறந்துவிட்டார். இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். கட்டிட வேலைக்கு அவர்கள் சென்று வருகின்றனர். திருமணமாகாத மணி ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து அதனை போட்டிக்கு அனுப்பி வந்ததுடன் தானும் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கி வந்துள்ளார். இதுதவிர கபடி விளையாட்டிலும் பங்கேற்று பல்வேறு ஊர்களுக்கு சென்றுவந்தார்.
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது எப்படி என குஜிலியம்பாறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கருங்குளத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும், கரூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுடன் மணியும் பழகி வந்துள்ளார்.
இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் தனது கள்ளக்காதலியை பார்க்க வரக்கூடாது என மணியை அவர் எச்சரித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது தொடர்பு நீடித்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி வேலை இல்லாமல் இருந்த மணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி குஜிலியம்பாறைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அங்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணியை தாக்கி உடலில் கல்லை கட்டியும், கை,கால்களை கட்டியும் வீசிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






