என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் கோவை பயணியிடம் 2½ கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பறிமுதல்
- வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
- தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தினமும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து கோவை, கேரளா, பெங்களூர் செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் காட்பாடி ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
பி3 பெட்டியில் கோவையை சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் பயணம் செய்தார். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க இருந்தது.
இதனை அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை வேலூர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆனந்தனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






