என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரப்பம்பாளையம் அரசு பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி என பொதுமக்கள் சார்பில் அச்சிடப்பட்டுள்ள போஸ்டரை படத்தில் காணலாம்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு
- ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
- கார் உள்ளிட்ட வாகனங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் வருவதை பார்த்த ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதையடுத்து மாரப்பம்பாளையம் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2023-24-ம் கல்வி ஆண்டில் சேருகிற மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச வாகன வசதி செய்யப்படும் என்று அப்பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த அறிவிப்புகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஊர்பொதுமக்கள் அறிவித்துள்ள இலவச சைக்கிள், இலவச வாகன வசதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.






