search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- கடலுக்கு செல்ல தயாராகும் ராமேசுவரம் மீனவர்கள்
    X

    கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வலைகள் மற்றும் பொருட்களை விசைப்படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- கடலுக்கு செல்ல தயாராகும் ராமேசுவரம் மீனவர்கள்

    • மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
    • நாளை நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழக பகுதிகளான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் உள்பட கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இதன் காரணமாக கடலுக்கு செல்லவில்லை.

    தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. 60 நாட்கள் தடை காலம் விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பலர் மாற்று வேலைக்கு சென்றனர்.

    சிலர் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை சரி செய்யவும், வர்ணம் பூசவும், வலைகளை பராமரிக்கவும், விசைப்படகு எஞ்சின்களை பழுது நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நாளை (14-ந் தேதி) நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். நேற்று முதல் மீனவர்கள் தங்களது படகுகளை தயார் நிலையில் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ், குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 2 மாதமாக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டதால் கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது அரசு கொடுக்கும் உதவித்தொகையும் போதிய அளவில் இல்லை. 2 மாதம் வருமானத்திற்காக மாற்று வேலைக்கு சென்று வந்தோம்.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. கடலுக்கு செல்ல ஆர்வமாக உள்ளோம். ஆனாலும் வழக்கம்போல் இலங்கை கடற்படை எங்களை மீன்பிடிக்க செய்யவிடாமல் விரட்டியடிக்கும் என்ற அச்சமும் உள்ளது என தெரிவித்தனர்.

    நாளை மறுநாள் தடை காலம் முடிய உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் துறைமுக கடற்கரை திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது.

    இதனால் விசைப்படகுகள் தரை முட்டி நின்றது. கரையில் இருந்து படகுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல சிறிய வல்லத்தை மீனவர்கள் பயன்படுத்துவார்கள். இன்று காலை மீனவர்கள் விசைப் படகுகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் போது கடல் உள்வாங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதனால் மீனவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின் மீனவர்கள் விசைப்படகில் தேவையான பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×